Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பினராயி விஜயன் ஆவேசம்

மார்ச் 12, 2019 09:39

திருவனந்தபுரம்: பிரதமர் மோடியை மீண்டும் ஆட்சிக்கு வர விடாமல் செய்வது நம் அனைவரின் கடமை என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறினார். கேரளாவில் ஆளும் கட்சியாக உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வருகிற பாராளுமன்ற தேர்தலில் 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதன் கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்டு 4 தொகுதியில் போட்டியிடுகிறது. 

திருவனந்தபுரம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திவாகரன் போட்டியிடுகிறார். வேட்பாளர் திவாகரனை அறிமுகப்படுத்தும் கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்தது. 

முதல்-மந்திரி பினராயி விஜயன், வேட்பாளர் திவாகரன் மற்றும் அந்த கட்சியின் முக்கிய தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பினராயி விஜயன் கூறியதாவது:- 

பிரதமர் மோடியின் 5 ஆண்டுகால ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்துள்ளது. அதே போல பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்தனர். இதே போல மக்களுக்கு துன்பம் தரும் ஏராளமான நடவடிக்கைகளை மோடி அரசு எடுத்துள்ளது. 

எனவே மீண்டும் மோடியை ஆட்சிக்கு வர விடாமல் செய்வது நம் அனைவரின் கடமை ஆகும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கீழ், அதன் வழிகாட்டுதல்படி பா.ஜனதா அரசு செயல்பட்டு வருகிறது. அவர்கள் தங்கள் கட்சியை வளர்க்கத் தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். நாட்டை விற்பது தான் அவர்கள் வேலையாக உள்ளது. 

மதம், மொழி ரீதியில் மக்களை மோடி பிரித்து செயல்படுகிறார். எனவே பா.ஜனதா ஆட்சியை வருகிற தேர்தலில் அகற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.  
 

தலைப்புச்செய்திகள்