Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோடிக்கணக்கான மக்கள் வறுமைக்கு தள்ளப்படுவார்கள்: சுப்பாராவ் எச்சரிக்கை

ஏப்ரல் 27, 2020 11:00

“கொரோனாவின் வேகம் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், பலி எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இதற்கிடையில் இந்தியாவில் லாக்-டவுன் நீடித்தால் அது பல கோடி இந்தியர்களை வறுமைக்கு கொண்டு செல்லக்கூடும்,” என்று ஆர்.பி.ஐ.யின் முன்னாள் ஆளுநர் சுப்பாராவ் எச்சரித்துள்ளார். 

மந்தன் அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட கொரோனாவுக்கு பிந்தைய உலகத்திற்கான பாடங்கள் என்கிற இணைய வழி கூட்டத்தில் ஆர்.பி.ஐ. முன்னாள் ஆளுநர் சுப்பாராவ் பேசியதாவது:
பெரும்பாலான ஆய்வாளர்கள் இந்த ஆண்டு இந்தியாவின் வளர்ச்சியானது எதிர்மறையாகச் செல்லும் அல்லது வளர்ச்சி குறைந்து விடும் என கருதுகிறார்கள். ஆனால், இந்தியாவில் பொருளாதாரம் இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே வீழ்ச்சியடைந்து விட்டது. கடந்த ஆண்டில் 5% இருந்த வளர்ச்சியானது, தற்போது கொரோனா லாக்-டவுனால் முற்றிலுமாக நின்றுவிட்டது. ஆக நாம் இந்த ஆண்டு எதிர்மறையான வளர்ச்சி அல்லது பூஜ்ஜியம் வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கப் போகிறோம்.

மேலும் நாம் மிகவும் ஏழ்மையான நாடு. நெருக்கடி தொடர்ந்தால் அதாவது லாக்-டவுன் நீட்டிக்கப்பட்டால், பல கோடி மக்கள் வாழ்வாதாரத்தின் எல்லைக்கு தள்ளப்படுவார்கள். மேலும் எனினும் ஆய்வாளர்கள் கணித்த படி நாட்டில் V வடிவ மீட்பு இருக்கும். இந்த மீட்சி மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகச் சிறப்பாக இருக்கும்.

நாட்டில் சூறாவளி, நிலநடுக்கம் என இயற்கை பேரிடர்களால் நமது பொருளாதார அல்லது உற்பத்தி கட்டமைப்புகள் சேதமாகவில்லை. ஆக  கொரோனாவில் இருந்து மீண்ட பிறகு, இழந்த பொருளாதாரம் மீண்டும் விரைவில் வளர்ச்சி காணும். தற்போதைய நிலைமை சீரடைந்ததும், மக்கள் தங்கள் வேலைகளைச் செய்யத் தயாராக உள்ளனர்.

இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது எந்த வேகத்தில் இறங்கியதோ, அதே வேகத்தில் விரைவில் மீண்டு எழும். இந்த வகையிலான மீட்பு இந்தியாவுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும். கடந்த 2008ம் ஆண்டில் சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா மிக வேகமாக அதிலிருந்து மீண்டு வந்தது. தற்போது சர்வதேச நாணய நிதியம் இந்தியாவின் நடப்பு ஆண்டின் வளர்ச்சி 1.9% என்ற அளவில் இருக்கும் என கூறியிருந்தது.

ஆனால், பல ஆய்வாளர்களின் பொருளாதார கணிப்பு காலாவதியானது என்றும், நாட்டின் ஜி.டி.பி. வளர்ச்சி எதிர்மறையாக செல்லக்கூடும். கணினியில் அதிக பணப்புழக்கத்தினை செலுத்துவதால் மட்டும் வேலை செய்ய முடியாது. மாறாக வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்கு கடன் உத்தரவாதம் தேவைப்படும். மேலும் நெருக்கடியின் போது மாநிலங்களுக்கு கூடுதல் ஆதரவு தேவை.
இவ்வாறு அவர் பேசினார்.

தலைப்புச்செய்திகள்