Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முழு ஊரடங்கு அமலில் இருந்த நகரம் போல் காட்சியளித்த திருச்சி

ஏப்ரல் 27, 2020 11:03

திருச்சி: முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படாமலேயே திருச்சியில் சாலைகள் கடைவீதிகள் வெறிச்சோடின.

கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ள சென்னை, கோவை, மதுரை மாநகராட்சிகளில் 4 நாட்களுக்கும் சேலம், திருப்பூர் மாநகராட்சிகளுக்கு 3 நாட்களுக்கும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. முழு ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வருபவர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள்.

தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக முழு ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்து இருக்கிறார்கள். இந்தநிலையில் திருச்சி மாவட்டத்தில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்றாலும் தற்காலிக காய்கறி சந்தைகள் செயல்படுவதற்கும் இறைச்சி மற்றும் மீன் கடைகள் திறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக திருச்சி நகரில் காந்தி மார்க்கெட் பெரிய கடைவீதி பாலக்கரை மெயின்ரோடு பகுதி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

பெரிய கடைவீதி பகுதியில் கடந்த சில நாட்களாகவே மக்கள் ஊரடங்கை மீறி திருவிழா கூட்டம் போல் கூடினார்கள். இதுபற்றி பத்திரிகைகளிலும், சமூக வலைத்தளங்களிலும் செய்திகள் பரவின. இதன் காரணமாக இந்த இடங்களில் போலீசார் தடுப்புகள் ஏற்படுத்தி மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தினார்கள். மன்னார்புரம், கோர்ட்டு எம்.ஜி.ஆர். சிலை உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கடும் நடவடிக்கை எடுத்தனர். தேவை இல்லாமல் சென்றவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதன் காரணமாகவும் திருச்சி முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த நகரம் போல் காட்சியளித்தது.

தலைப்புச்செய்திகள்