![](admin/uploads/.5f9d08bd48eb77.06678676.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுச்சேரி: புதுச்சேரி உழவர் சந்தைக்கு காய்கறி வாங்க வந்தவர்களை குளவி கொட்டியதால் 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் உழவர் சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் வருகிற மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இருந்தபோதிலும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால், பெரிய மார்க்கெட் பகுதியில் செயல்பட்டு வந்த காய்கறி கடைகள், புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டு, செயல்பட்டு வருகிறது.
அதேபோல் புதுச்சேரி பழைய பஸ் நிலையம் பகுதியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த விவசாயிகளும், வியாபாரிகளும் கடை அமைத்து காய்கறி விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று உழவர் சந்தை அருகிலுள்ள தாவிரவியல் பூங்காவில் இருந்து படையெடுத்து வந்த குளவிகள் காய்கறி வாங்க வந்தவர்களை விரட்டி விரட்டி கொட்டின. இதன் காரணமாக 12 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் மயக்கம் அடைந்த அவர்கள் உடனடியாக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில், ஏழு பேர் புறநோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள். மேலும் 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே சிகிச்சை பெற்று வருபவர்களை முதல்வர் நாராயணசாமி நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். மேலும் குளவி கொட்டியதைத் தொடர்ந்து உழவர் சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.