Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்ப விரும்பும் தமிழர்கள் சிறப்பு இணையதளத்தில் பதிவு செய்யலாம்

ஏப்ரல் 30, 2020 10:29

சென்னை: வெளிநாட்டில் தங்கியுள்ள தமிழர்களை தாயகம் அழைத்து வர தமிழக அரசு சிறப்பு இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

வெளிநாட்டில் இருக்கும் தமிழர்களை மீட்கும் நடவடிக்கையாக தமிழக அரசு சார்பில் வெளியான அறிக்கை: இந்தியா முழுவதும், கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 25 முதல் அமலில் இருந்து வருகிறது. இதனால், சர்வதேச விமானப் போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், தமிழகத்தை சேர்ந்த பல மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் நம் நாட்டிற்கு வர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

அவ்வாறு வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்களில், உடனடியாக தமிழகத்திற்கு திரும்ப விரும்புகிறவர்களின் நலனுக்காகவும், அவர்களின் குடும்பத்தினரின் நலனை காத்திடும் நோக்கிலும், அவர்களது எண்ணிக்கையினை அறியும் வகையிலும், தமிழகத்திற்கு திரும்புகிறவர்களுக்கு தனிமைப்படுத்துதல் வசதிகள் ஏற்படுத்திடவும், அவர்களை பற்றிய தகவல்களை பெறுவதற்காக இணைய பதிவு வசதி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு திரும்ப விரும்பும் தமிழர்கள் nonresidenttamil.org என்ற இணைய முகப்பில் பதிவுகள் செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்