Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருப்பரங்குன்றம்: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் "ஒன்றிணைவோம் வா" திட்டத்தின்கீழ், தொகுதி மக்களுக்கு கோழிக்கறியை திருப்பரங்குன்றம் தி.மு.க. எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன் வழங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நுழைவதற்கு முன்பிருந்தே இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க குரல் கொடுத்தவர்களில் எம்.எல்.ஏ. சரவணனும் ஒருவர். திருப்பரங்குன்றம் தி.மு.க. எம்.எல்.ஏ.வான இவர், கொரோனா வைரஸ் பரவல் அவ்வளவாக தமிழகத்தில் நுழைவதற்கு முன்பே மானிய கோரிக்கை விவாதத்திற்காக சட்டப்பேரவைக்கு மாஸ்க்குடன் வந்து பெரும்பாலானோர் கவனத்தை ஈர்த்தார்.
அதுமட்டுமல்லாமல் தன் தொகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முன்னின்று விடாமல் கவனித்து வருகிறார். அதேசமயம் தொற்று ஏற்பட்டவர்களும் இங்குண்டு. பாதிக்கப்பட்டவர்கள் சிறப்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டு, அவர்கள் டிஸ்சார்ஜ் ஆகியும் சென்று வருகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் டாக்டர் சரவணன்தான். தீயணைப்பு வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்க ஏற்பாடு செய்ததுடன், விரகனூர், சிந்தாமணி உள்ளிட்ட பகுதிகள் மொத்தமும் கிருமிநாசினி மருந்தை தெளித்தார். பிறகு டிரோன் மூலம் கிருமிநாசினி மருந்தை தெளிக்கும் புது முயற்சியில் இறங்கினார். அது மக்களுக்கு முழு பலனை சென்றடைந்தது.
இந்நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்திய, "ஒன்றிணைவோம் வா" என்ற திட்டத்தில் திருப்பரங்குன்றம் தொகுதி பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார். அதில் ஒன்றுதான் கோழிக்கறி வழங்கும் திட்டம். தன்னுடைய தொகுதி மக்களுக்கு இந்த கோழிக்கறியை விநியோகித்து வருகிறார். முதல்கட்டமாக மதுரை அண்ணாநகர் பகுதியில் பொதுமக்களுக்கு இலவசமாக கோழிக்கறி, அரிசி, பருப்பு,காய்கறிகள் வழங்கி உள்ளிட்ட உணவு பொருட்களையும் வழங்கினார். முகத்தில் மாஸ்க், கவரில் சிக்கன் சகிதம் இந்த உதவிகளை வழங்கி வருவது தொகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.