Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மகாராஷ்ட்ராவில் தத்தளிக்கும் தமிழக தொழிலாளர்களை மீட்க வேண்டும்: ஸ்டாலின் கோரிக்கை

மே 04, 2020 11:29

சென்னை: “மகாராஷ்ட்ராவில் உள்ள தமிழகத் தொழிலாளர்களை அழைத்துவர, காலம் தாழ்த்தாது தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருவதற்கான தொழிலாளர்களின் பயணச் செலவை அரசே ஏற்க வேண்டும்,” என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திராவிட முன்னேற்றக் கழகத்தின் 'ஒன்றிணைவோம் வா' செயல்திட்டத்தில், மகாராஷ்ட்ராவில் வாழும் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுடன் நடத்திய காணொலிக் காட்சி ஆலோசனை மூலமாக, அவர்கள் இந்த கொரோனா பேரிடர் காலத்தில் பாதுகாப்பாகத் தமிழ்நாட்டுக்கு வர விரும்புகிறார்கள் என்பது தெரிந்தது. இதுகுறித்து, மகாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் தி.மு.க. தலைவர் என்ற முறையிலும், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையிலும் தெரிவித்தேன். நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு மகாராஷ்ட்ரா முதல்வரிடம் கலந்தாலோசித்துள்ளார்.

தமிழகத் தொழிலாளர்களைச் சொந்த மாநிலத்திற்கு அனுப்ப தங்களின் அரசு தயாராக இருக்கிறது என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இதனையடுத்து, மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலிடமும் டி.ஆர்.பாலு விவரத்தைத் தெரிவித்துள்ளார். மத்திய அரசும் சிறப்பு ரயில் மூலம் மகாராஷ்ட்ராவிலிருந்து தமிழகத்திற்குத் தொழிலாளர்களை அனுப்பத் தயாராக உள்ளது. தமிழக அரசுத் தரப்பிலிருந்து உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால், அந்தத் தொழிலாளர்கள் பாதுகாப்பாக வந்து சேர்வார்கள்.
தமிழகத் தொழிலாளர்களை மகாராஷ்ட்ராவிலிருந்து திரும்ப அழைத்து வரவேண்டும் என்பது குறித்து பிற மாநிலங்களில் சிக்கியுள்ள தமிழர்களை தமிழகம் அழைத்துவர சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கூடுதல் தலைமைச் செயலர் அதுல்ய மிஸ்ராவுக்கும் கடிதம் எழுதியிருக்கிறேன்.

தமிழக அரசு காலம் தாழ்த்தாது மத்திய அரசிடமும் மகாராஷ்ட்ரா மாநில அரசிடமும் தொடர்புகொண்டு இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழகத் தொழிலாளர்களுக்கான பயணச் செலவிற்கானப் பொறுப்பினையும், அவர்களுக்கான பரிசோதனைகள் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து விரைந்து மீட்டு, அழைத்து வர தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்