Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நான் மாண்டியா தொகுதியில் போட்டியிடுவது உறுதி: சுமலதா அம்பரீஷ் பேட்டி

மார்ச் 13, 2019 06:44

மாண்டியா: பாராளுமன்ற தேர்தலில் நான் மாண்டியா தொகுதியில் போட்டியிடுவது உறுதி என்று மறைந்த நடிகர் அம்பரீசின் மனைவி சுமலதா அம்பரீஷ் கூறினார். மாண்டியாவில் நேற்று இரவு நடிகையும், மறைந்த நடிகர் அம்பரீசின் மனைவியுமான சுமலதா அம்பரீஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் மாண்டியா தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. இருப்பினும் மாண்டியா மக்களும், அம்பரீசின் ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து என்னை மாண்டியா தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தினர். 

அதன்பேரில் நான் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடலாமா?, வேண்டாமா? என்று ஆலோசித்து வந்தேன். இதுபற்றி நான் காங்கிரஸ் தலைவர்களிடமும் பேசினேன். ஆனால் காங்கிரஸ் கூட்டணியில் மாண்டியா தொகுதியில் முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி போட்டியிட உள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதற்கிடையே என்னைப்பற்றி பல வதந்திகளும், பொய்யான செய்திகளும் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரவி வருகின்றன. மேலும் நான் மாண்டியா தொகுதியில் போட்டியிடப்போவதில்லை என்றும் சிலர் பொய்யான செய்தியை பரப்பி வருகிறார்கள். 

நான் இந்த தேர்தலில் மாண்டியா தொகுதியில் போட்டியிடுவது உறுதி. ஆனால் நான் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறேனா? அல்லது சுயேச்சையாக போட்டியிடுகிறேனா? என்பது தான் இங்கு கேள்விக்குறி?. மற்றபடி நான் தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவேன். தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்யவே இன்னும் 5 நாட்கள் முழுமையாக உள்ளது. அதற்குள் எப்படியும் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழும். 

அதில் எனக்கு தகுந்தாற்போல் சில சாதகமான விஷயங்களும் நடக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு சுமலதா அம்பரீஷ் கூறினார். 

தலைப்புச்செய்திகள்