Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எதிரொலி: இந்த ஆண்டு நீட் தேர்வை ரத்து செய்ய கோரிக்கை

மே 06, 2020 06:01

புதுடெல்லி: “கொரோனா வைரஸ் பாதிப்பால் நாடு முழுவதும் பெரும் பாதிப்பை சந்தித்து வரும் நிலையில் இந்தியாவில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை இந்தாண்டு ரத்து செய்தால் ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறுவார்கள்,” என, அனைத்து தரப்பினரும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் ஜெயலலிதா இருக்கும் வரை நீட் தேர்வு உள்ளே வரவில்லை. அவர் இறந்த பிறகு கடந்த 2017ம் ஆண்டு முதல் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கு முன்னர் வரை மாணவர்கள் ப்ளஸ் 2 தேர்வில் இயற்பியல், கணிதம், உயிரியல், வேதியியல் ஆகிய மதிப்பெண்களின் கட் ஆஃப் மதிப்பெண்களை கொண்டு மருத்துவ சேர்க்கை நடைபெற்று வந்தது. ஆனால், நீட் தேர்வுபடி இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான தேர்வு அந்தந்த பிராந்திய மொழிகளில் நடைபெறும். அதில் அதிக மதிப்பெண்கள் பெறுவதை வைத்தே மருத்துவ சேர்க்கை நடைபெறுகிறது.

இந்த தேர்வு சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு வேண்டுமானால் எளிதாக இருக்கும். ஆனால், மாநில பாடப்பிரிவின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு இந்த தேர்வுக்கு தயாராவது என்பதே பெரும் சவாலாக உள்ளது. இதனால்தான் தமிழகம், புதுவை உள்ளிட்ட அரசுகள் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்குமாறு கோரிக்கை விடுத்தன.

மேலும் வசதி வாய்ப்பை பெற்றிருக்கும் குழந்தைகள் நீட்டுக்கான சிறப்பு வகுப்புகளில் லட்சக்கணக்கில் பணம் செலுத்தி கற்றுக் கொள்கின்றனர். ஆனால், உணவுக்கே வழியில்லாமல் மருத்துவராகி இலவச மருத்துவம் பார்க்க வேண்டும் என்ற உயரிய லட்சியத்துடன் இருக்கும் ஏழை, கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு என்பது எட்டாக்கனியாகி வருகிறது.

இதுபோன்று பிரச்சினைகள் இருக்க தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடந்த 40 நாட்களுக்கும் மேல் மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் வீட்டில் முடங்கிக் கிடக்கும் அவல நிலையில் உள்ளனர். இதனால் வழக்கமாக மே மாதம் நடைபெறும் நீட் தேர்வு முதலில் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது ஜூலை மாதம் 26ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு உத்தரவால் நாடு முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மாணவர்களால் வெளியே சென்று புத்தகங்களை வாங்கவோ, பயிற்சி வகுப்புகளுக்கு செல்லவோ வழியில்லாமல் போய்விட்டது.

என்னதான் ஆன்-லைன் மூலம் நீட் தேர்வுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டாலும் அந்த வசதிகளை இல்லாத ஏழை மாணவர்களின் நிலையை கருத்தில் கொள்ள வேண்டும். அரசும், தன்னார்வலர்களும் இலவசமாக நடத்தி வந்த நீட் தேர்வு வகுப்புகளில் படித்து வந்தார்கள். தற்போது வெளியே போக முடியாததால் இவர்கள் நீட் தேர்வுக்கு தயாராவதில் சிக்கல் நிலவி வருகிறது. எனவே, நாடு முழுவதும் நீட் தேர்வை இந்த ஆண்டு மட்டுமாவது ரத்து செய்தால் ஏழை, எளிய மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து ஒட்டுமொத்த இந்தியாவும் ஏன் உலக நாடுகளே திணறி வரும் நிலையில் தற்போதைக்கு நீட் தேர்வு தேவையில்லை என்றும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது தான் அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.

தலைப்புச்செய்திகள்