Saturday, 28th September 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்சி: திருச்சி மாநகரில் மது வாங்குவதற்காக மதுக் கடைகளில் சமூக இடைவெளிக்காக அடையாளமிடப்பட்டிருந்த வட்டங்களில் மதுப்பிரியர்கள் தங்களது காலணிகளை வைத்து இடம் பிடித்து காத்திருந்த சம்பவம் வைரலாகி வருகிறது.
கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக 40 நாள்களுக்கு மேலாக மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. இந்தநிலையில், இன்று முதல் மது விற்பனை நடைபெறும் என அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து தமிழகம் முழுக்க சென்னை மற்றும் கண்டெய்ன்மெண்ட் அல்லாத பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டது.
திருச்சி மாவட்டத்தில் மாநகரப் பகுதியில் 63 கடைகள் ஊரகப் பகுதியில் 100 கடைகள் என மொத்தம் 163 கடைகள் மட்டும் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 20 கடைகள் கொரோனா கட்டுப்பாடுகளுக்குள் வருவதால் அந்த கடைகளை திறக்க அனுமதியில்லை.
இந்தநிலையில், அதிகாலையிலேயே மதுக்கடைகளை நோக்கி மதுப் பிரியர்கள் படையெடுக்கத் தொடங்கினர். கடை திறப்பதற்கு முன்பே கடை முன் வரிசையில் நிற்க தொடங்கினார்கள். திருச்சி மாநகரில் புத்தூர் நான்குசாலை பகுதியில் உள்ள கடைகளில் சமூக இடைவெளிக்காக அடையாளமிடப்பட்டிருந்த வட்டங்களில் மதுப்பிரியர்கள் தங்களது காலணிகளை வைத்து இடம் பிடித்து காத்திருந்தனர்.
மேலும், மத்திய பேருந்துநிலையப் பகுதியில் காலை 8.30 மணிக்கே டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது. ராமகிருஷ்ணா பாலம் மற்றும் ஒரு சில கடைகளில் வாழைத் தோரணம், பூ மாலைகள் அணிவித்து கடைகளை திறக்க ஏற்பாடு செய்திருந்தனர். காலையில் இருந்து குடிமகன்கள் பலர் டோக்கன் வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்தனர்.
கூட்டத்தைக் கடுப்படுத்தவும், சமூக இடைவெளியை கண்காணிக்கவும் காவல்துறை, ஊர்க்காவல்படை, தன்னார்வலர்கள் கொண்ட குழுவினரும் மதுக்கடைகள் முன்பாக குவிக்கப்பட்டுள்ளனர்.