Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆர்டர் செய்தால் வீடு தேடி வரும் மதுபானம்: களமிறங்குகிறது ஜொமாடோ நிறுவனம்

மே 08, 2020 10:28

சென்னை: மது விற்பனை மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், மதுபான டோர் டெலிவரி சேவையில் ஈடுபடுகிறது ஜொமாடோ நிறுவனம். கொரோனா பாதிப்புகள் குறைவாக உள்ள இடங்களில் முதற்கட்டமாக டெலிவரி சேவை தொடங்குகிறது.

கொரோனா பீதியால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்வதற்கு மட்டுமே சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி இருந்தது. ஊரடங்கு சற்று தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மதுபானங்களை மீண்டும் விற்பனை செய்வது குறித்த அறிவிப்பு வெளியானது. தமிழகத்தில் நேற்று முன்தினம் மே 7 முதல் மதுபானக் கடைகள் திறக்கப்படலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கிலும் மது விற்பனைக்கு அனுமதி கிடைத்தது. இதனால் மதுப் பிரியர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அரசின் வருவாயைக் கருத்தில் கொண்டு மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

சமூக விலகல் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளுடன் டாஸ்மாக் கடைகள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன. மதுக்கடைகளில் நேரில் சென்று வாங்குபவர்களுக்கு ஒரு நாளில் ஒரு பாட்டிலுக்கு மட்டுமே அனுமதி உள்ளது. ஆன்-லைனில் மதுபானங்கள் விற்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 2 பாட்டில்கள் மட்டுமே விற்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் உள்ளது. இந்நிலையில், ஆன்-லைன் உணவு டெலிவரி சேவை நிறுவனமான ஜொமாடோ, மதுபானங்களை டெலிவரி செய்யத் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து ஜொமாடோ நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியான மோஹித் குப்தா கூறியதாவது:
தொழில்நுட்பம் சார்ந்த டோர் டெலிவரி முறையால் மது விற்பனையும் மதுபானங்களின் நுகர்வும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். கொரோனா பாதிப்புகள் குறைவாக இருக்கும் இடங்களில் மதுபானங்களை டெலிவரி செய்வதில் கவனம் செலுத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

மதுபானங்கள் விற்பனை வாயிலாக மாநில அரசுகளின் வருவாயும் அதிகரிக்கும் என்பதால் மதுபானங்களுக்கான டோர் டெலிவரி சேவையைத் துரிதப்படுத்தலாம் என்று இத்துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். ஸ்விக்கி நிறுவனமும் விரைவில் மதுபானங்களுக்கான டெலிவரி சேவையைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்